Showing posts with label புலம்பெயர்ந்தவர். Show all posts
Showing posts with label புலம்பெயர்ந்தவர். Show all posts

சிறீலங்காவின் பொருளாதாரமும் தமிழரும்

Sunday, November 15, 2009 · 0 comments


கடந்த பல ஆண்டுகளாக தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் போர் நடாத்திவந்த சிறீலங்கா அரசாங்கமானது உலக நாடுகள் முழுவதிலும் கடன் வாங்கிய கடனாளியாக நிற்கின்றது. பெரும் தொகைப் பணத்தினை போரிலே கொட்டிக் குவித்த அரசு அந்நியச் செலவாணியைப் பெறுவதில் பெரும் சிக்கல்களைக் கண்டு வந்திருந்தது.

போர்ச்சூழலால் சுற்றுலாத்துறையும் நெருக்கடியில் இருந்ததனால் இச் சிக்கல் மேலும் அதிகரித்திருந்தது. இருந்த போதிலும் புலம் பெயர்ந்து கணிசமான அளவில் வெளிநாடுகளில் குடியேறிய தமிழ் மக்களும் சிங்கள மக்களும் தங்கள் உறவினர்களிற்கு அனுப்பும் பணங்களின் மூலம் சிறிது வருவாயினைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அதைப் போலவே இவ்வாறு புலம்பெயர்ந்த மக்கள் தாங்கள் வாழும் நாடுகளில் ஆரம்பித்த வியாபார நிறுவனங்களிற்குத் தேவையான பொருட்களை சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலமும் சிறீலங்கா அரசானது தனது பொருளாதாரத் தேவையை ஓரளவு பெற்றுவந்தது. இதில் பெரும்பான்மையான நிதிவளமானது தமிழர்கள் மூலமாகவே சிறீலங்கா அரசிற்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களைக் கொன்று குவிப்பதற்குச் செலவளிக்கும் நிதியின் பகுதியைத் தமிழர்களிடமே இருந்து சிறீலங்கா அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ளது.

இக்காலப்பகுதியில் சிறீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன், உலர் உணவுப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பாவனைப் பொருட்கள் என்பன தமிழ் மக்களால் புலம்பெயர்ந்த நாடுகளில் விரும்பி வாங்கப்பட்டிருந்தன.

பின்னர் புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்ச்சியினால் சிறீலங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது சிறீலங்காவிற்கு வருவாய் அளிக்கும் பொருட்கள் விற்பனை கணசமான அளவு வீழ்ச்சியடைந்தது.


இலங்கையில் உற்பத்தியான நிருவின் பொருள்
(படத்தின் மேல் click செய்து பெரிதாகப் பார்க்கமுடியும்)

இருப்பினும் இதன் மூலம் வீழ்ச்சியடையும் சிறீலங்காவின் வருமானத்தை தூக்கி நிறுத்துவதற்கு தமிழர் நிறுவனமான 'நிரு பிராண்ட்' சிறீலங்காவிற்கு உதவ முன்வந்துள்ளது. கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் இந் நிறுவனமானது சிறீலங்கா உற்பத்திகளை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தனது உற்பத்தி என்ற பெயரில் சந்தைப்படுத்துகின்றது.

'யாழ்ப்பாண முறையில் தயாரித்த மிளகாய்த்தூள்' என்று மிளகாய்த்தூள் வியாபாரத்துடன் ஆரம்பித்து பின்பு அரிசிமா, பயற்றம்மா, உழுத்தம்மா என்று விற்பனையைப் பிடித்த இந் நிறுவனமானது தற்போது ஏனைபொருட்கள் விற்பனையிலும் கால்பதித்துள்ளது.

சிறீலங்காவின் மலிபன் நிறுவனத்தின் 'லெபன்பஃப் பிஸ்கேட்' இற்கு அந் நிறுவனத்தின் ஊடாகத் தனது பெயரில் பொதி செய்து ஆரம்பித்து சிறீலங்கா அரச நிறுவனங்களில் ஒன்றான MD இனால் தயாரிக்கப்படும் பழச்சாறுகள் மற்றும் ஜாம் என்பவற்றிலும் அந் நிறுவனம் ஊடாகத் தனது பெயரில் பெற்று சந்தைப்படுத்தலைச் செய்து வருகின்றது.

தமிழர்களை அழித்து நிற்கும் சிங்கள கொடுங்கோல் அரசினை உலக நீதிமன்றக் கூண்டில் நிறுத்துவதற்கும், தமிழர்கள் நலன் பேணுவதற்காக சிறீலுங்கா அரசிற்கு உலகநாடுகள் அழுத்தம் கொடுக்கவேண்டும் என்றும் தமிழர்கள் போராடிவரும் இவ்வேளையில் தமிழர்களின் பணத்தில் தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் ’நிரு பிராண்ட்’ நிறுவனமானது அத் தமிழர்களிற்கு எதிரான சிங்கள் அரசுடன் கைகோர்த்துள்ளதைத் தமிழர்கள் இங்கே கவனிக்க வேண்டும்.

கனடா மட்டுமல்லாது குறிப்பிட்டத்தக்க அளவு ஐரோப்பிய புலம்பெயர் தமிழர்களிடமும் சந்தையைத் தக்கவைத்திருக்கும் இத் தமிழர் நிறுவனத்தின் இப் பாதகச் செயலை தமிழ் மக்கள் கவனத்தில் எடுக்கவேண்டும்.

அத்துடன் இதுபோன்ற செயல்கள் இனியும் நடைபெறாதிருக்க அனைத்துத் தமிழர்களும் ஒன்றுபடவேண்டும். அவ்வாறு கவனிக்காது விடுவோமானால் அது பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிவிடும் கதையாய் மாறிவிடும்.  உலகும் எம்மைக் கவனியாது கைகழுவும் நிலை வரும்.


கற்க கசடற - An Education Expo, பதிவுகள் ஆரம்பம்!

Sunday, October 04, 2009 · 0 comments

ஏற்கனவே எனது பதில் கூறியிருந்ததைப் போன்று கனடியத் தமிழ் சமூகத்தின் தேவைகளை முன்வைத்து முதன்முறையாக நடைபெறும் Education Expo பற்றிய மேலதிக விபரங்களுடன் இப்பதிவு:

ஒக்ரோபர் மாதம் 30 மற்றும் 31ம் திகதிகளில் நடைபெறவுள்ள 'கற்க கசடற' an Education Expo for Canadian Tamils என்னும் கல்விசார் அறிவூட்டும் நிகழ்வு பற்றி உங்களிற்கு ஏற்கனவே அறியத்தந்திருந்தேன்.

ஒக்ரோபர் மாதம் 30 ம் திகதி, கனடிய மண்ணிலே தமிழர் கல்விக்கு தமிழர் சமூகத்தில் இருந்து உதவிபுரிந்தவர்கள், உதவிபுரிந்த புரிந்துகொண்டுள்ள அமைப்புக்கள் மற்றும் தமிழர் கல்விக்கு துணைபுரிந்த வேற்றுநாட்டவர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் spot light நிகழ்வுடன் ஆரம்பமாகவுள்ளது. பொதுவான இந்நிகழ்விற்கு வேற்றின சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அழைக்கப்படுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மறுநாள் சனிக்கிழமை ஒக்ரோபர் 31ம் திகதி கனடிய மண்ணிலே இதுவரை தமிழர்கள் எதிர்பார்த்திருந்த Education Expo நிகழ்வு நடைபெறுகின்றது. காலை 10 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நடைபெற ஏற்பாடாகியுள்ள இந் நிகழ்விலே பல பயன்தரும் கல்விசார் விடயங்கள் இடம்பெறவுள்ளன.

இதில் பாலர் பாடசாலையில் இருந்து தரம் 12 வரையுள்ள பாடத்திட்ட விபரங்கள், இவ் வகுப்புகளில் கல்விபயிலும் மாணவர்கள் தொடர்பாகவும் அவர்கள் கல்வித்திட்டம் தொடர்பாகவும் பெற்றோர்கள் அறியவேண்டிய விடயங்கள் தொடர்பான விளக்கங்களும் அதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது.

அதுமாத்திரமல்லாது, high school என அழைக்கப்படும் இரண்டாம் நிலைப் பாடசாலையில் எவ்வாறு நேரங்களை ஒழுங்குசெய்வது, எவ்வாறு சோதனைக்கு தயாராவது எப்படிப் பல்கலைக்கழகத்திற்கான பொருளாதார நிலையைக் கவனிப்பது, எவ்வாறான பாடங்களை எப்படித் தெரிவுசெய்வது போன்ற பயனுள்ள தகவல்கள் மாணவர்கள் பெறக்கூடியதாக இருக்கும்.

அதேபோல் கனடாவிற்குப் புதிதாகக் குடியேறியோர் எவ்வாறு இக் கல்வித் திட்டத்தினுள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளமுடியும் என்பது தொடர்பான தகவல்களும் இங்கே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

அவ்வாறே வேலைதேடுவது தொடர்பான பயிற்சிகள், தகவல்கள் என்பனவும் வழங்கப்படவுள்ளது.

இவ்வாறு நடாத்தப்படுகின்ற பயிற்சிப் பட்டறைகள் (workshops) இனில் பங்கு பற்றுவதற்கு முன்கூட்டியே பதிவுசெய்து கொள்ளவேண்டும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். இப் பதிவுகள் ஒக்ரோபர் மாதம் 9ம் திகதி, வெள்ளிக்கிழமை, வரை இடம்பெறும் என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பதிவுகளை இணையத்தளமூடாகவும் (http://www.kalvicanada.org/) , நேரடியாக கனடியத் தமிழர் பேரவை அலுவலகத்தில் வாரநாட்களில் காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணிவரையும் மேற்கொள்ளமுடியும். கனடியத் தமிழர் பேரவையானது 31 Progress Avenue (Kennedy/Progress), Suite 216 இனில் அமைந்துள்ளது.

பயிற்சிப்பட்டறைத் (workshops) தலைப்புக்கள் - http://kalvicanada.org/program.html

பதிவுகளிற்கு - http://kalvicanada.org/registration.html

இதுபற்றிய மேலதிக விபரங்களை 905-471-8070 என்ற தொலைபேசியில் அழைத்துப் பெற்றுக்கொள்ளலாம். மின்னஞ்சல் முகவரி info@kalvicanada.com






'கற்க கசடற' - Education Expo

Saturday, September 19, 2009 · 0 comments

கற்க கசடற என்னும் ஓர் கல்விக் கண்காட்சி ஒன்று கனடித் தமிழர்களால் கனடியத் தமிழர் வரலாற்றில் முதற் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் மாத இறுதி நாள்களில் இது நடைபெறும் எனத் நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.


இதுபற்றி மேலதிக விபரம் கிடைத்தவுடன் விபரமாகப் பதிவிடப்படும்.

http://www.kalvicanada.com/

புலம்பெயர் நாடுகளும் தமிழர் ஊடகங்களும்.

Tuesday, September 15, 2009 · 0 comments

பிரித்தானிய ஆதிக்கம் நிலவிய காலணித்துவ காலத்தில் இந்தியா மற்றும் இலங்கைத் தீவுகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழர்கள் வேலைவாய்ப்புக்களிற்காக வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் சிறிது காலம் வேலைசெய்த பின்னர் தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பியிருந்தனர். அவ்வாறு திரும்பி வராதவர்கள் தாங்கள் சென்ற நாட்டின் வாழ்வுமுறைகளுடன் தங்களை இணைத்துக் கொண்டுவிட்டனர். இவ்வாறு தங்களை அந்தந்த நாடுகளின் வாழ்க்கைமுறைகளில் இணைத்துக்கொண்டவர்கள் மொரிசிஸ், பிஜித் தீவுகள், மேற்கிந்தியத் தீவுகள், தென்னாபிரிக்கா, நைஜீரியா போன்ற பல நாடுகளில் வசித்து வருகின்றார்கள். இலங்கைத் தீவில் வீச்சுக் கொண்ட இனப்பிரச்சினையின் பின்னர் உலக நாடுகளில் தமிழர்களின் பரம்பலானது ஓர் பெரும் வீச்சினை அடைந்தது. இவ்வாறு இடம்பெயர்ந்து சென்ற தமிழர்களில் மிகப் பெரும்பகுதியினர் தாங்கள் சென்ற நாடுகளிலே தங்கள் வாழ்வைத் தொடங்கிவிட்டார்கள். அத்துடன் தாங்கள் வாழும் நாடுகளில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையுடன் வாழ்ந்து வருவதுடன் தங்கள் சமுக கட்டமைப்பையும் பேணக்கூடியவர்களாகவும் தங்கள் தமிழ் மொழி அறிவினைத் தொடர்ந்து பேணி தங்கள் குழந்தைகளிற்கும் வழங்குபவர்களாக இருக்கிறார்கள். அவ்வாறே பல்வேறு ஊடக முயற்சிகளையும் மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தாய் மொழியில் தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடிகின்றது. குறிப்பாக வேற்றுமொழியில் சரளமாக தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாதவர்களிற்கு இம் முயற்சி மிகச் சிறந்த பயனைக் கொடுக்கும். ஆயினும் இவ்வூடகங்களோ இவ்வாறான மக்களிடம் இருந்து பணம் பறிக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன. பணத்தைப் பெறும் ஒரு வழியாகவே இன்று புலம்பெயர்ந்த தேசங்களில் தமிழர்கள் ஊடகங்களை நடாத்துகின்றனர். குறிப்பாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களைப் பார்த்தோமேயானால் அவற்றில் தங்கள் தாய்நாட்டுத் தகவல்களையே தொடர்ச்சியாக கூறுகின்றார்கள். புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் தமிழ் மக்களிற்காக அந்தந்த நாடுகளில் நடாத்தப்படும் இவ்வூடகங்கள் அந் நாடுகளில் நடைபெறும் சமுதாய மாற்றங்களை அல்லது அங்கு வாழும் தமிழர்களில் செல்வாக்குச் செலுத்தும் அல்லது பாதிக்கும் விடயங்களில் முக்கியத்துவம் அளிப்பதாகத் தெரியவில்லை. தாய்நாட்டுத் தகவல்கள் முக்கியமல்ல என்று இங்கு கூறவில்லை, தாய்நாட்டுடன் தாங்கள் வாழும் நாடு பற்றிய விழிப்புணர்வும் தேவைப்படுகின்றது என்பதனை இவ்வூடகங்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. தென்னிந்தியச் சினிமாப்பாடல்களும், இலங்கை இந்தியச் செய்திகளும், தென்னிந்தியச் சின்னத்திரைத் தொடர்களுமே இவ்வூடகங்களில் வெளிவருகின்றது. அந்தந்த நாட்டு நிலவரங்களை வெளிக்கொணர வேண்டியது ஒவ்வொரு ஊடகத்தின் கடமை என்பதை அவ்வூடகங்கள் மறந்துவிடக்கூடாது. அவ்வாறு செய்யாது விடின் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் இரண்டு தமிழர் குழுக்கள் உருவாகவும் சமூகம் பற்றிய விழிப்புணர்வு அற்ற ஓர் தமிழ்ச் சமூகமாகவும் நாம் உருமாறும் நிலை ஏற்படும்

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator