தமிழரும் அரசியற் தலைமையும்

Friday, August 28, 2009 · 1 comments

கடந்த மே மாதம் முதல் இடியப்பச் சிக்கலாக உருமாறிய தமிழீழப் பிரச்சினை ஓர் முடிவிற்கு வருவது போன்ற நிலை இதுவரை என் கண்களில் எட்டவில்லை. மாறாக மென்மேலும் இது சிக்கிலான வடிவம் எடுப்பது போன்ற தோற்றப்பாடே என்முன் தோன்றி நிற்கின்றது. பிரித்தானியாவின் ஆட்சியில் இருந்து 1948ஆம் ஆண்டில் சிங்கள அசாங்களின் கைகளிற்கு இலங்கைத் தீவின் ஆட்சியதிகாரம் கைமாறி, தமிழர்களின் சுதந்திரம் அடியோடு மறுக்கப்பட்ட நிலையில் ஆயுதப் போராட்டத்தின் ஊடாக இவ்வருட ஆரம்பம் வரை தமிழர்கள் தங்கள் உரிமை மீண்டும் பெறப்படப் போகின்றது என்ற நிலை இருந்தது. ஆயினும் கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லை என்பது போன்று தமிழர்களின் ஆயுதப் போராட்ட வலு உலக நாடுகளால் நசுக்கப்பட்ட வேளையில் மீண்டும் ஆரம்பித்த இடத்தை விட்டு தமிழர்களின் உரிமைப் போராட்டம் பின்தங்கியுள்ளதாகவே நான் உணருகின்றேன். ஆயுதப் போராட்டக் கருத்து வலுப்பெற்று இளையவர்கள் ஆயுதம் ஏந்திய 70இற்கு முற்பட்ட காலப்பகுதியை நான் ஊடகங்கள் மூலமும் பொத்தகங்கள் மூலமாகவும் பெற்றுக்கொண்ட அறிவினூடா திரும்பிப் பார்க்கின்றேன். பல்வேறு அரசியற் தலைவர்கள்@ தங்களிடம் தங்கள் இனத்தின் தேவைகள் தொடர்பாக ஓர் ஒத்த கருத்தினைக் கொள்ளமுடியாதவர்கள். சிங்கள அரசுகளுடன் தங்களை சமரசம் செய்துகொண்டு தமிழர் உரிமைகளை அடகுவைத்தவர்கள் எனப் பலர். இவர்களின் தமக்குள்ளான சண்டைகளைப் பொறுக்கமுடியாத இளையோர்கள் தாங்கள் அணி திரண்டனர். அவ் இளையோரிற்கும் இம் மூத்த தலைவர்களால் இடையூறுகள். இவற்றிற்கிடையே ஆயுதம் மீது இவ்விளையோர் நம்பிக்கை வைக்கின்றார்கள். பொன். சிவகுமாரன், சிங்களப் படைகளை தன்னந் தனியனான களைப்படையச் செய்கின்றான். தன்கூட தனக்கு கைகுடுக்கும் சிலவேளைகளில் நடுவழியில் விட்டுவிடும் நண்பர்கள் துணையுடன் ஆயுதம் மீது நம்பிக்கை வைக்கின்றான். அவன் வழியில் பிடிப்புக் கொண்டு பின்னாட்களில் ஆயுதக்குழுக்கள் உருவாகின. தன் கொள்கையில் உறுதி கொண்ட பொன். சிவகுமாரன் சிங்கள அரசபடைகளின் சுற்றிவளைப்பில் அகப்படும் போது நஞ்சுண்டு தற்கொலை செய்து தன் உறுதியை வெளிப்படுத்தினான். உருப்பெற்ற ஆயுதக் குழுக்கள் தமிழீழ விடுதலையைத் தங்கள் கொள்கையாக வரித்துக் கொண்டு ஆயுத இயக்கங்களாக உருமாற்றம் அடைகின்றன. பின்னர் தலைவர்கள் வழி தவறிய போக்கினைத் தொடர்ந்து ஏனைய இயக்கங்கள் வலுவிழக்கத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மாபெரும் விடுதலை இயக்கமாக கொள்கைப் பிடிப்புள்ள போராளிகள், தளபதிகள் மற்றும் தலைவர்களுடன் உருமாறியது வரலாறு. இப்படி ஒரு வரலாற்று நிகழ்வினை எம் கண்முன்னே கண்டுவந்த தமிழர் மீண்டும் 70களின் ஆரம்பத்தில் எவ்வாறு மிதவாதத் தலைவர்கள் என்று சொல்லப்பட்ட எம் தமிழ் தலைவர்கள் பதவிக்காகவும் சொகுசுக்காகவும் அடிபட்டுக்கொண்டார்களோ அவ்வாறே அடிபட்டுக்கொண்டுள்ளோம். தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரதேசத்தில் நிலங்களைக் கட்டுப்பாட்டில் இருந்தபோது அவர்களே தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசைகளையும் தெளிவாக அடையாளப்படுத்தியும் தலைமையேற்றும் முன்னெடுத்து வந்திருந்தனர். இன்று அவர்களது இராணுவபலம் அழிக்கப்பட்ட நிலையில், இலங்கைத் தீவில் இருந்து கொண்டு சிங்கள இனவாத அரசின் அடக்குமுறைகளிற்கு எதிராக எதும் செய்ய முடியாத நிலையில் மக்கள் இருக்கும் வேளையில் அவ்வாறான அரசியற் செயற்பாட்டை உலகளாவிய ரீதியில் மிக வேகமாக முன்னெடுத்து தமிழர்களின் பிரச்சினை தீர வழியேற்படுத்த வேண்டிய புலம்பெயர் சமூகமானது தமிழர் பிரச்சினையை மிகவும் சிக்கல்படுத்தி மீண்டும் ஆரம்பப் புள்ளிக்கு நகர்த்திச் சென்றுகொண்டுள்ளது. இன்று புலம்பெயர்ந்த சமூகத்தில் இருக்கும் தமிழர் அரசியலில் முக்கிய முடிவுகளை மேற்கொள்ளும் அனைவரும் தங்கள் நலன்களை முன்னிறுத்துவது போன்றே எனக்குத் தோன்றுகின்றது. இதில் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளிற்கு உதவியாக இருந்தவர்கள் முன்னிற்பது மிகவும் கவலைக்குரியதாக இருக்கின்றது. அவர்கள் தமக்குள் அணிபிரித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் குழப்பும் மற்றும் வசைபாடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டுள்ளார்கள். இதுவரைகாலமும் தமிழீழ மக்களின் துன்பம் களையத் தாங்கள் பாடுபடுவதாக் கூறியவர்கள் இன்று மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் துன்பச் சுமையைச் சுமக்க மேலும் வலுவற்றவர்களாக இருக்கும் வேளையில் உறுதியுடன் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டியவர்கள் அற்பத்தனமாக நடந்து கொள்கின்றார்கள். இவர்களின் இவ்வாறான செயற்பாடானது இவர்கள் எதற்காக இவ்வளவு காலமும் ஒட்;டியிருந்தார்கள் என்ற கேள்வியை என்னுள் எழுப்புகின்றது. இவ்வாறான இப் பெரியவர்களின் செயற்பாடானது ஓர் முற்றிற்கு வரவேண்டியுள்ளது. இன்று ஈழத்தமிழனம் தனக்காக தமிழர் நலனையே நோக்காகக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த தலைவர்களை இழந்த நிலையில், மீண்டும் ஓர் தலைமையைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. இவ்வாறான தலைமைப் பெற்றுக்கொள்வதற்கு ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களாவது கடந்து முடியும் என்பது என் கணிப்பு. இதற்குள் தமிழின அழிவைத் தடுத்து நிறுத்த வேண்டிய தேவையும் அனைவருக்கும் உண்டு. இவ்வாறு எமக்குள்ளே நாம் குடுமிப்பிடிச் சண்டை செய்துகொண்டிருக்கும் சூழலில் எவ்வாறு இத் தலைமையை அடைவது, இத் தலைமைப் பொறுப்பினை யாரால் வகிக்கமுடியும் எனக் கேள்விகள் எழும் போது அதற்கு விடையாக அமையப்போவது எது. ஆகக் குறைந்தது ஐந்து வருடங்களின் பின் ஓர் சிறந்த வலுவான தலைமை அமைந்தால் மட்டும் போதாது, அது தொடர்ச்சியாகச் செயலாற்ற வேண்டும். தனக்குப் பின்னர் தலைமையேற்பதற்கு என தொடர்ச்சியான தலைவர்களை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் நடைபெறவேண்டுமாயின் இதற்குத் தகுதியானது தற்போது பதினெட்டு வயதிலிருந்து முப்பது வயதிற்குட்பட்ட இளையவர்களினாலேயே முடியும். அதுவும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து நாடுகளிலும் உருவாக வேண்டும். இதனை நான் இங்கு குறிப்பிடும் போது அனைவரும் வாய்விட்டுச் சிரிக்கலாம் அல்லது என்னைப் பைத்தியக்காரன் எனலாம். வரலாறு எனது வழிகாட்டி என வாழ்ந்து காட்டிய தலைவனை நான் அடையாளம் காட்டுகின்றேன். பதினாறு வயதில் துப்பாக்கியுடன் புறப்பட்ட அத்தலைவன் முப்பது வயதிலே தமிழீழப் போராட்டத்தின் காவலனாக முப்பத்து மூன்று வயதிலே பொறுப்பேற்கின்றான் (ஏனைய போராட்ட அமைப்புக்கள் தமிழீழ விடுதலை அரங்கில் மக்கள் செல்வாக்கை இழந்து தடைவிதிக்கப்பட்ட காலம்). அதனாலேயே இவ்வாறு ஓர் பலங்கொண்ட அர்ப்பணிப்புக் கொண்ட விடுதலைப் போராட்டத்தைக் கொண்டு நடத்த முடிந்தது. இளையவர்களிடம் இருந்து அர்ப்பணிப்புள்ளவர்களை, சுயநலம் அற்றவர்களை மற்றும் கொள்கைப் பற்று உள்ளவர்களை இப்போதே அடையாளம் அவர்கள் பின்னால் அணிவகுக்கவேண்டிய கட்டாய கடமைப்பாடு உலகெங்கும் உள்ள தமிழர்களிற்கு உண்டு. முதிர்ந்த தலைவர்களாக இருக்கலாம் ஆயினும் எதிர்கால தமிழ் இனத்தின் நலனைக் கருத்தில் கொண்டு இளையோரிடம் தங்கள் தலைமைப் பொறுப்பினை அவர்கள் கைமாற்றவேண்டும். இன்று இக்குறிப்பிட்ட வயதெல்லையில் இருப்பவர்களால் மட்டுமே நிலையான தலைமைத்துவத்தினை நீண்டகாலத்திற்கு வழங்கி தொடர்ந்து தலைவர்களை அடையாளம் காட்ட முடியும். அத்துடன் நீண்டகாலத்திற்கு திறனுடன் செயலாற்ற முடியும் என்பது என் கணிப்பு. அத்துடன் இளையவர்களைச் சுயமாகச் சிந்தித்து செயலாற்றும் வண்ணம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் எதிர்காலத் தலைவர்களை அடையாளம் காணக்கூடியவாறு இருக்கும். இளையவர்களை முன்னே விட்டுவிட்டு பின்னால் நின்று அதைச் செய்யாதே இதைச் செய்யாதே அல்லது இவ்வாறு தான் இதனைச் செய்யவேண்டும் என்று அடம்பிடிப்பதை நிறுத்தவேண்டும். தமிழினம் இன்று நிற்கும் இவ் இக்கட்டான நிலையில் இருந்து மீளவேண்டுமாயின் இளைவர்களை அவர்களது வழியில செயற்படவைத்து அவர்களிற்கு பக்கதுணையாக நிற்காவிடின் தமிழினம் மீளாது என்பதுறுதி. எவ்வாறு இளையவர்களால் எழுபதுகளின் முற்பகுதியில் துணிவுடன் அப்போதைய முதிர்ந்த தலைவர்களை எதிர்த்து அனைவரையும் எதிர்த்து சிங்கள அடக்குமுறைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதோ அதைப் போன்றதொரு போராட்டம் அடக்க நினைப்பவர்கள் அனைவரையும் எதிர்த்து முன்னெடுக்கப்படவேண்டும். ஆயிரம் ஆயிரம் மாவீரர்கள் எதற்காக உயிர்விட்டார்கள். தமிழீழம், தமிழினம் என்றதற்காக மட்டுமே உயிர்விட்டார்கள். தாயிருந்தும் தந்தையிருந்தும் கூடப்பிறந்து வாழ்ந்த சோதரர்கள் தானிருந்தும் அக்கம் பக்கம் அயலிருந்தும் கூடிக் குலாவிய சொந்தமிருந்தும் எதற்காக வெடிசுமந்தார் காரிருள் வேளையிலும் ஆழக் கடல் பரப்பினிலும் கடும்மழைக் குளிரிலிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தேகமெல்லாம் வலிக்கையிலும் எதற்காக வெடிசுமந்தார் வெடியாகிப் போகையிலே – கண்ணெதிரே அம்மா வந்தாலென்ன அப்பா வந்தாலென்ன ஒற்றுமையாய் ஒன்றாக பள்ளிசென்ற தம்பி வந்தாலென்ன தங்கை வந்தாலென்ன நட்பு வந்தாலென்ன மெல்லியதாய் புன்னகைத்து கையசைத்து வார்தையேதும் சொல்லாது சென்றிட்ட கரும்புலிகள் தியாகங்கள் தியாக வேள்விகளில் குளிர்காய்ந்தநாம் இனியேனும் சிறுதுரும்பாவது அசைக்க முயல்வோம். இளையோரின் பின்னாலே அணிவகுத்துத் தயாராவோம்.

ஒழுக்கம்

Sunday, August 23, 2009 · 0 comments

இன்று இணையத்தளத்தில் ஓர் செய்தி படித்துவிட்டு அச் செய்தியுடன் தொடர்புடைய விடயம் தொடர்பாக எம் மனதிற்குட்பட்ட விடயத்தில் ஆராய்ச்சியில் இறங்கியிருந்தேன். அப்போது அதற்கு எவ்வகையிலும் ஒன்றிணையாத வகையில் இன்னொரு விடயத்தின் மீது எனது கவனம் சென்றுகொண்டிருந்ததை என்னால் அறியக்கூடியதாக இருந்தது.
ஒழுக்கம், உலகில் வாழும் உயிரினங்கள் அனைத்தினாலும் கடைப்பிடிக்கப்படும் ஓர் மிகச் சாதாரண விடயம்.
இது இனத்திற்கு இனம், உயிரினத்திற்கு உயிரினம் மற்றும் குடும்பத்திற்குக் குடும்பம் வேறுபடும்.எம் மனித இனத்திலே பல்வேறு பட்ட மனிதக் குழுமங்களும் பல்வேறு வேறுபட்ட சிலவேளைகளில் ஒன்றுக்கொன்று முரணான விதிகளை வகுத்து ஒழுகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறே ஒவ்வொரு நாடுகளும் அவற்றிற்கென்று குறிப்பான ஒழுக்கங்கள் நடைமுறைகளைக் கொண்டுள்ளன. ஆயினும் சில விடயங்களில் பொதுப்படையான முறைகள் கைக்கொள்ளப்படுகின்றன. அதிலும் குறிப்பாக பாதுகாப்புப் படைகள் விடயத்தில் உயர் ஒழுக்கம் கடைப்பிடிக்கடுவது குறிப்பிடத்தக்கது. இவ்வேளையில் சிறீலங்கா, இந்தியப் படைகளினால் தமிழீழப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒழுக்கமீறல்களும் என்மனக் கண்முன்னே வந்து தொலைக்கிறது.
இம்மனவோட்டமே என்னை இன்று இது தொடர்பாக அனைவருடனும் பகிர்ந்து கொள்ள உந்தித்தள்ளியது.
இவ்வாறு ஓர் ஒழுக்கங்கெட்ட படைகளிற்கு எதிரான வீரச்சமராடிய தமிழீழ மாவீரர்களின் ஒழுக்கமானது அவர்களை எல்லாரினையும் விட மேலே உயர்த்துகின்றது.
மே மாதம், இரண்டாம் மூன்றாம் கிழமைப் பகுதிகள், போரின் உச்சக்கட்டம். ஒவ்வொரு எறிகணையிலும் உயிர்கள் பறிகொள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. மே மாதம் 19ம் திகதிக்குப் பின்னர் சிறீலங்கா அரசு தமிழீழ மாவீரர்களின் படங்களை வெற்றிக் களிப்புடன் வெளியிட்டுக்கொண்டிருக்கிறது. என் மனமோ துன்பச் சுமையில் நசுங்கிக் கொண்டிருந்தது. இருந்தும் பெருமை கொண்டது. அக் களத் தமிழீழ மாவீரர்களின் ஒழுக்கங்களை எண்ணி.
சிறீலங்கா அரசாங்கம் வெளியிட்ட புகைப்படங்களில் இருந்த படங்களில் இருந்து ஒவ்வொரு மாவீரனின் முகத்தையும் கவனிக்கின்றேன். ஒழுங்காக சவரம் செய்யப்பட்ட முகம். எவ்வளவு ஓர் கட்டுப்பாடான ஒழுக்கம் பேணப்பட்டிருக்கவேண்டும்! அடுத்த நொடி உயிர் இருக்குமோ இல்லையோ என்று தெரியாத நிலை. ஆயினும் தங்கள் படை ஒழுக்கத்தை எவ்வளவு இறுக்கமாகப் பேணியுள்ளார்கள்.
சாதாரண போராளிகள் மட்டுமன்றி தலைவர்கள், பொறுப்பாளர்கள் என்று அனைவரும் பேணியுள்ளார்கள்.
கடந்த முப்பத்திமூன்று ஆண்டுகளிற்கு மேலாக முனைப்புப் பெற்று, இத்தனையாயிரம் போராளிகள் கட்டுப்பாட்டுடன் கண்ணியத்துடன் கட்டிக்காத்துப் போராடிவந்த வேளையில் அவர்கள் தியாகத்தை அடகு வைத்து நாம் எவ்வாறெல்லாம் பேசுகின்றோம்.
தமிழீழம் என்ற உன்னத இலட்சியத்தை வரிந்து கொண்டு போராடியவர்கள் வழியில் நாமும் போராடவேண்டாமா.
யார் பெரிது என்ற பேதமின்று அனைவரும் ஒழுக்கமுடன் எம் மாவீரர் தடம் பற்றி எமக்காய் அவர்கண்ட கனவுகளை நாம்சுமந்து ஒன்றாகி நிற்போம். எதிரியின் தடை தகர்ப்போம். எம் தேசம் மீட்போம்.

ஆகஸ்ட் 13

Thursday, August 13, 2009 · 0 comments

13ம் இலக்கம் என்றாலே மேற்குநாட்டினரிற்கு கொஞ்சம் கசப்பான இலக்கம். அதுவும் அவர்கள் கிருத்தவர்கள் என்றால் 13ம் இலக்கத்தில் எந்த நிகழ்வுகள் செய்வதனையும் தவிர்த்து வருவார்கள். ஏன் பெரும்பாலான இடங்களில் அடுக்கு மாடிக் கட்டடங்களில் 13 ஆவது தளத்தினைத் தவிர்த்து 12 இற்குப் பிறகு 14 ஆவது தளம் என்று சுட்டிக்காட்டுவார்கள். இவ்வாறு மேற்கு நாட்டினரிடையே இருந்த இப் பழக்கம் கிழக்கு நாட்டினரிற்கும் தென்னாசிய நாடுகளிற்கும் மேல்நாட்டு ஊடகங்களின் வாயிலாக உட்புகுத்தப்பட்டுள்ளது.

சரி இதனை ஏன் இன்று அதுவும் ஆகஸ்ட் 13 என்று தலைப்பிட்டுவிட்டு இருந்து பேசிக்கொண்டிருக்கிறேன் என்ற கேள்வி உங்கள் அனைவர் மனங்களிலும் எழுவது தவிர்க்கமுடியாதது.
ஆம் இவ்வாறு ஒதுக்கி வைக்கப்பட்ட இவ்விலக்கம் நெடுங்காலமாக விசித்திரமான மனிதர்கள் என்று சமூகத்தால் ஒதுக்கப்பட்ட மக்களை அவர்கள் விசித்திரமானவர்கள் அல்ல என்று சமூகத்தில் ஓர் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 13, பன்னாட்டு இடதுகைப்பழக்கம் உள்ளவர்களிற்கான நாளாக பன்னாட்டு இடதுகைப்பழக்கம் உள்ளவர்களின் அமைப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 1976ஆம் ஆண்டிலிருந்து இது கடைப்பிடிக்கப்படுகின்றது.
20 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில் இடதுகைப்பழக்கம் உள்ளவர்களிற்கு சாத்தானின் தொடர்பு உண்டு என்று கூறி அவர்களை இச் சமூகம் ஒதுக்கிவைத்திருந்தது. ஆயினும் இன்று உலகநாடுகளைக் கட்டுப்படுத்தும் நாடுகளில் ஒன்றான ஐக்கிய அமெரிக்க இராச்சியத்தின் அதிபராகப் பதவியேற்று உலகநாடுகளைக் கட்டுப்படுத்தும் பராக் ஒபாமா இடதுகைப் பழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இடதுகைப் பழக்கம் என்பது வலது கைக்குப் பதிலாக இடது கையைப் பாவிப்பது தானே என்பது போன்று சிறியதொரு மாற்றமாகத் தோன்றினாலும் இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் அவர்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றார்கள் என்பது மிகவும் உண்மையான விடயம்.
இதற்கு சிறிய ஓர் உதரணமாக நாம் பயன்படுத்தும் கணினியின் மெளஸ் (Mouse) இனை எடுத்துக்கொள்ளலாம். அதில் நாம் அதிகம் பயன்படுத்துவது left button. சுட்டுவிரலினால் இலகுவான பயன்படுத்துவதற்காக அவ்வாறு செய்துள்ளார்கள். ஆனால் இதனை இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் பயன்படுத்தும் போது சுட்டுவிரல் தவிர்ந்த விரலினைப் பயன்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். இதனைச் சரிசெய்யும் ஓர் உத்தியாகவே இடதுகைப் பழக்கம் உள்ளவர்களான அப்பிள் கணினியை வடிவமைத்தவர்கள் அதன் mouse இற்கு ஒரேயொரு button இனை வைத்து வடிவமைத்துள்ளார்கள்.
இடதுகைப் பழக்கம் என்பது ஒரு நோயல்ல, அல்லது அவர்களை ஒதுக்கி வைப்பதற்கு அவர்கள் சாத்தானிடம் இருந்து வந்தவர்களும் அல்ல. அது மரபணுவுடன் சம்மந்தப்பட்ட விடயம். அத்துடன் அவர்களைச் சிறுவயதில் சுற்றியுள்ளவர்களால் ஏற்படும் மாற்றம். ஆதலால் இடதுகைப் பழக்கம் உள்ள குழந்தைகளை அவர்களின் செயற்பாடுகளில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த முனையாது அவர்களை அவர்களது செயலில் ஈடுபட நாம் அனுமதிக்க வேண்டும்.
நாம் இடது கைப்பழக்கம் உள்ள குழந்தை என்று ஓர் குழந்தையை வலது கைப் பழக்கம் உள்ள குழந்தையாக மாற்ற முனைவோமாயின் அக் குழந்தையின் மனநிலை குழப்பமடையலாம். அது அக் குழந்தையின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைக்குக் கூட இட்டுச்செல்லலாம்.

ஆயத்த நிலை.....

Wednesday, August 12, 2009 · 0 comments

அனைவருக்கும் வணக்கம், கடந்த காலங்களில் பொது இணையக் கருத்துக்களங்களில் எழுதிவந்த நான் மிக அண்மைக்காலங்களில் அவற்றினைத் தவிர்த்து வந்திருந்தேன். ஆயினும் மீண்டும் எனது எண்ணங்களையும் கருத்துக்களையும் அனைவருடனும் திறந்த மனதுடன் பகிரந்து கொள்ளலாம் எனும் எண்ணத்துடன் இவ் வலைப்பதிவுப் பக்கத்தினை ஆரம்பிக்கின்றேன். என்னால் பகிரப்படும் கருத்துக்களிற்கு நீங்க ஏதாவத கூறவிரும்பின் அதனை பின்னூட்டமாக இடலாம். பின்னூட்டங்கள் நாகரிகமான சொற்பிரயோகங்களுடன் இருப்பின் அவை என்னைத் தூற்றுவனவாக இருப்பினும் பிரசுரிக்கப்படும் :)

நட்புடன்,

OpenTalk.

On the mark.. set... GO!

Sunday, August 09, 2009 · 0 comments

Hi everyone,


Since I had few blogs couple of years in back and gave up writing on the public places recent years. Once again, I decided to write and share my thought to the community as my two cents.

It's upto everyone to take it serious or just to ignore, but I just want to share how I feel, what is my idea, some thoughts that how can we all work together, what are the needs we have in the community, how we serve better to the community.

Just share your ideas and thoughts....

Join the hands... work together.. build a better society.....

Regards,
OpenTalk.

eXTReMe Tracker

Oli 96.8 FM

TamilNet Newswire

வேறு இணைப்புகள்

More than a Blog Aggregator